கொள்ளைபோன ₹20 லட்சம் மதிப்புள்ள நகை.. 3 நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த பார்சல்.. பிரிச்சு பார்த்துட்டு குழம்பிப்போன உரிமையாளர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கொள்ளையடித்த நகையில் சிலவற்றை உரிமையாளருக்கு கூரியர் அனுப்பியிருக்கிறார்கள் திருடர்கள். இந்நிலையில் திருடர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி சிரோஹி. இவர் கடந்த 23 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருக்கிறார். பின்னர் 27 ஆம் தேதி வீடு திரும்பிய பிரீத்தி வீட்டின் உள்ளே கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
சோதனையிட்டதில் வீட்டில் வைத்திருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் ப்ரீத்தி சிரோஹி நந்திகிராம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், IPC பிரிவு 380ன் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இதனிடையே சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. அதாவது கடந்த 31 ஆம் தேதி பிரீத்தியின் வீட்டுக்கு கூரியர் ஒன்று வந்திருக்கிறது அதில் ராஜ்தீப் ஜூவல்லர்ஸ், சரஃபா பஜார், ஹாபூர் என முகவரி எழுதப்பட்டிருக்கிறது. அதனுள் இருந்த பெட்டியை பிரீத்தியின் குடும்பத்தினர் பிரித்துப் பார்த்த போது ஒருகணம் குழம்பினாலும், அடுத்த வினாடி மகிழ்ந்து போயினர்.
காரணம் அந்த பெட்டியினுள் திருடுபோன பிரீத்தியின் நகைகள் இருந்திருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்தபோது 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மட்டுமே கூரியரில் வந்திருந்ததாக பிரீத்தியின் மகன் ஹர்ஷ் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு கடையே இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, கூரியரை டெலிவரி செய்த நபரை சிசிடிவி கேமரா மூலமாக கண்டறிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மற்றொருவரையும் காவல் துறையினர் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
Also Read | அடிதூள்.. 3 மாசம் வரையில் பயன்படுத்தலாம்... புதிய 'ஆவின் டிலைட்' பசும்பால்...

மற்ற செய்திகள்
