`21 வயதில் டி.எஸ்.பி... 25 வயதில் சப் கலெக்டர்!' சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் 'லேடி ஹீரோ'... யார் இந்த 'பிரியா வர்மா?'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 23, 2020 10:30 AM

மத்திய பிரதேசத்தில் சி.ஏ.ஏ. வுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, பாஜக வைச் சேர்ந்த ஒருவரை கன்னத்தில் அறைந்து ஒரே நாளில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானவர் தான் இந்த பிரியா வர்மா.

Priya Verma who is trending on social media overnight

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர். #PriyaVerma என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டானது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், யார் இந்தப் பிரியா வர்மா என்று இணையத்தில் தேடி வந்தனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்திலுள்ள மங்காலியா கிராமத்தைச் சேர்ந்தவர் இந்தப் பிரியா வர்மா. அவருக்கு சிறுவதிலிருந்தே ஆட்சியர் ஆக வேண்டும் என்பது கனவு. முதலில் எழுதிய யு.பி.எஸ்.சி மற்றும் சி.எஸ்.இ தேர்வுகளில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. தொடர்ந்து தனது முயற்சியால், 2014-ம் ஆண்டு உஜ்ஜைன் மாவட்டத்திலுள்ள பைரவ்கர் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2015-ம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.

மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய பதவிகளில் இருந்ததாலும் அவருடைய அதிரடி நடவடிக்கைகளாலும் ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்தார். தற்போது ராஜ்கர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்திய அளவில் பிரியா வர்மா பேசப்படுவதற்கு முக்கிய காரணம் போராட்டக்களத்தில் நடந்த சம்பவம்தான். மத்தியபிரதேச மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், ராஜ்கரில் பாஜகவினர் பேரணி நடத்தினர். அப்போது வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முயன்ற பிரியா வர்மா ஒரு கட்டத்தில் பாஜக தோண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.

பிரியா வர்மாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் சிலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

பிரியா வர்மா தன்னம்பிக்கை பேச்சாளரும்கூட. யூடியூபில் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராவது தொடர்பான சின்னச் சின்ன விஷயங்கள் முதல் முக்கியமான விஷயங்கள் வரை தன்னுடைய கருத்துகளைத் தொடர்ந்து வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார்.

Tags : #PRIYA VERMA #SOCIAL MEDIA #OVERNIGHT TREND #SUB COLLECTOR #MADHYA PRADESH