கொரோனாவில் இருந்து 'தப்பித்த' 93 வயது முதியவர்... ஆஸ்பத்திரில கூட இந்த 'சாப்பாடு' தான் கேட்டாரு... 'ரகசியத்தை' உடைத்த பேரன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 02, 2020 07:59 PM

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கினை மாநில அரசுகள் மேலும் கடுமையாக செயல்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் 93 வயது முதியவர் மற்றும் அவருடைய 88 வயது மனைவி இருவரும் கொரோனாவிடம் இருந்து தப்பித்து பூரண குணமடைந்த ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.

Kerala man Beats COVID-19; Family Shares Secret behind Recovery

கேரள மாநிலம் பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வரும் தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (93), மரியம்மா (88) தம்பதியர் இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இத்தாலியில் இருந்து வந்த ஆபிரகாமின் மகன், மருமகள், பேரனால் இவர்கள் இருவரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கிடையில் மகன், மருமகள், பேரன் மூவரும் குணமடைந்து விட்டனர். ஆனால் ஆபிரகாம், மரியம்மா இருவரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் மோசமான நிலையில் இருந்து குணமடைந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கின்றனர்.

முதியவர்களை அதிகம் குறிவைக்கும் கொரோனாவில் இருந்து தம்பதிகள் இருவரும் குணமடைந்த ரகசியம் குறித்து அவர்களின் பேரன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர்,  ''தாத்தாவிடம் மது, பீடி, சிகரெட், புகையிலை என எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. ஜிம்முக்கு செல்லாமலே அவருக்கு சிக்ஸ்பேக் உடல்கட்டு இருந்தது. கொரோனாவில் இருந்து அவர்கள் இருவரும் பிழைத்தது அதிசயம் தான். தாத்தாவுக்கு பழங்கஞ்சியும், தேங்காய் சட்னியும் தான் பிடித்த உணவு. மருத்துவமனையில் இருந்தபோது கூட அவர் அந்த உணவைத்தான் விரும்பி கேட்டார்.

இதேபோல மரவள்ளிக்கிழங்கு, பலாப்பழமும் அவருக்கு மிகவும் பிடிக்கும். பாட்டிக்கு மீன் தான் மிகவும் பிடிக்கும். அவர்களை குணப்படுத்த மருத்துவர்களும், ஊழியர்களும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதில் கேரள அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் எப்போது இத்தாலியில் இருந்து எப்போது வருவோம் என தாத்தா, பாட்டி இருவரும் காத்திருந்தனர். தற்போது அவர்களின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.