'பசங்கள பள்ளிக்கு அனுப்ப பயமா இருக்கு'...'புத்தக அறையில் பாம்பு'...' மாணவனை கடித்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 27, 2019 09:44 AM

கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர்களைப் பாம்பு கடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருவது பெற்றோர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

Kerala: Class 5 Student Named Jerald Suffers Snakebite from School

வயநாடு மாவட்டம் பத்தேரி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவி ஷஹலா ஷெரினை கடந்த 22-ம் தேதி பாம்பு கடித்தது. பள்ளி வகுப்பறையில் மாணவியை பாம்பு கடித்த நிலையில், மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால்  அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சோக வடு மறைவதற்குள் மீண்டும் ஒரு மாணவனை பாம்பு கடித்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் சாலக்குடி சி.எம்.ஐ கார்மல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெரால்டு. மாணவன் ஜெரால்டு பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது பாம்பு ஒன்று மாணவனை கடித்துள்ளது. இதனை அறிந்து பதறி போன ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவனை அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவனின் உடலில் பாம்பு கடித்ததற்கான அறிகுறிகளும் காயமும் உள்ள நிலையில், பாம்பின் விஷம் உடலில் பரவவில்லை. மாணவன் தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதனிடையே பள்ளிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மாணவனைக் கடித்த பாம்பை பிடித்தனர். பள்ளியில் புத்தகங்கள் வைக்கும் அறையில் இருந்து பிடிக்கப்பட்ட அந்தப் பாம்பு அணலி வகையைச் சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் பள்ளியில் மாணவர்களை பாம்பு கடிப்பது தொடர்ந்து வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே கேரளத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் ஓட்டைகளை அடைக்கவும், புதர்களை அழிக்கவும் அரசு துரித நடவடிக்கை எடுத்தது வருகிறது.

Tags : #KERALA #SCHOOLSTUDENT #STUDENTS #SNAKEBITE #5TH STANDARD #JERALD