சீனாவுக்கு எதிரா ஒரு 'ஆதாரமும்' குடுக்கல... அமெரிக்காவை 'குற்றஞ்சாட்டும்' உலக சுகாதார அமைப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | May 06, 2020 05:35 AM

கொரோனா விவகாரத்தில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் ஒன்றையொன்று மாற்றி,மாற்றி குற்றஞ்சாட்டி வருகின்றன. கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் ஆராய்ச்சி மையத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனா அமெரிக்கா தெரிவித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது.

WHO says US has provided no proof on Wuhan lab claims

ஆனால் அமெரிக்காவின் எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் கண்டு அஞ்சாத சீனா சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் டிரம்ப் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் உதவியுடன் ஆதாரங்களை திரட்டிட திட்டமிட்டு வருகிறார். மறுபுறம் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடி கால தலைவர் மைக்கேல் ரேயான் சீனாவுக்கு எதிரான எந்தவொரு ஆதாரத்தையும் அமெரிக்கா அளிக்கவில்லை என  தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ''கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் தோன்றியது என்று கூறப்படுவது எங்கள் பார்வையில் ஊகத்தின் அடிப்படையில்தான், அது அப்படியே நீடிக்கிறது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி எந்த ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தையும் அமெரிக்க அரசு எங்களிடம் வழங்கவில்லை. அப்படி ஆதாரம் வழங்கினால் அதைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்.

கொரோனா வைரஸ் இயற்கையானதுதான் என்பதற்கான ஆதாரங்களும், ஆலோசனைகளும்தான் எங்களுக்கு வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கொரோனா வைரஸ் உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்துதான் வந்திருக்கிறது என்று கூறுவதற்கான தரவுகள் அல்லது ஆதாரங்கள் இருந்தால், அதை பகிர்ந்து கொள்வதா, எப்போது பகிர்ந்து கொள்வது என்பதை அமெரிக்க அரசு தான் தீர்மானிக்க முடியும்.

அதே நேரத்தில் அப்படியெதுவும் இன்றி வெறுமனே, ஒரு முடிவுக்கு வருவது என்பது உலக சுகாதார நிறுவனத்துக்கு கடினமான விஷயம் ஆகும். நாங்கள் சீன விஞ்ஞானிகளிடம் இருந்து தெரிந்துகொள்ள முடியும். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியும். நாம் ஒன்றாக இணைந்து பதில்களை பெற முடியும்.

ஆனால் இது தவறான செய்கையின் தீவிரமான விசாரணைக்கு உரியது என்று முன்னிறுத்தப்பட்டால் இதை கையாள்வது மிகக்கடினமானது. இது அறிவியல் விவகாரம் அல்ல. இது அரசியல் விவகாரம். அறிவியல் என்றால் அதற்கான விடையைக் காண முடியும். அந்தப் பதில்களின் தாக்கங்களை ஒரு கொள்கை மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் கையாள முடியும்,'' என தெரிவித்து இருக்கிறார்.