'ஊரடங்கால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்'... 'பெண்களுக்கு வரபோகும் ஆபத்து' ... ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 30, 2020 09:57 AM

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உலகம் முழுவதும் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்று ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது.

Coronavirus Lockdown to result in 70 lakh unwanted Pregnancies

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இது பல விதங்களில் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்திலும் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஊரடங்கின் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் வெளிவந்துள்ள தகவல்கள் பல அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த ஊரடங்கு பெண்களின் வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பொருட்கள் வருவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

நடுத்தர வருவாய் கொண்ட 114 நாடுகளில் சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இதன்காரணமாக 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

அதே நேரத்தில் ஆண்களும் பெண்களும் தற்போது வீட்டில் இருப்பதால் மோதல் சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 6 மாதங்களில், 3 கோடியே 10 லட்சம் மோதல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3 மாதங்கள் ஊரடங்கு நீடித்தால், மேலும் ஒரு கோடியே 50 லட்சம் மோதல் நிகழ்வுகள் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே மிக முக்கிய பிரச்சனையாக, ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள் திருமணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தடுக்க அரசுகள் தீவிரம் காட்ட வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.