'வுஹானில்' இறந்தவர்களின் எண்ணிக்கை 'இதுதானா?'... ஆயிரக்கணக்கான 'அஸ்தி' கலசங்களால் எழுந்துள்ள 'புதிய' சந்தேகம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 01, 2020 09:46 AM

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

China Urns In Wuhan Prompt Questions Of Coronavirus Death Toll

சீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், வுஹான் நகரில் கொரோனாவால் 2,548 பேர் உயிரிழந்ததாக சீன அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து  8 தகன மையங்களில் இருந்து உயிரிழந்தவர்களின் சாம்பலை அவர்களுடைய குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளலாம் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான அஸ்தி கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மேலும் கடந்த வாரம் புதன், வியாழன் ஆகிய 2 நாட்களில் மட்டும் ஒரு தகன மையத்திலிருந்து 2,500 அஸ்தி கலசங்கள் விநியோகத்துக்காக லாரியில் ஏற்றப்பட்டதாக கைக்ஸின் எனும்  சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவற்றில் எத்தனை கலசங்களில் சாம்பல் நிரப்பப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து விநியோகிக்கப்படும் அஸ்தி கலசங்களின் எண்ணிக்கை குறித்த கேள்விகளுக்கு  2 தகன மையங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும், மற்ற தகன மையங்களில், 'இது தொடர்பான புள்ளிவிவரங்கள் எங்களிடம் இல்லை' எனவும், 'இந்த எண்ணிக்கையை வெளியிட எங்களுக்கு அதிகாரம் இல்லை' எனவும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக வுஹான் நகரில் கொரோனா வைரஸால் 2,548 பேர் உயிரிழந்ததாக அரசு கூறுவதைக் காட்டிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : #CORONAVIRUS #COVID-19 #CHINA #HUBEI #WUHAN #DEATH #TOLL #URNS