'இன்னமும் கூட அங்க நிறைய வைரஸ் இருக்கலாம்!... 'எத்தனை பேர் உயிர் போனா 'இத' பண்ணுவீங்க!?'... ஏகக்கடுப்பில் அமெரிக்கா!... என்ன செய்யப்போகிறது சீனா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 10, 2020 06:08 PM

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பரில் வூஹான் நகரின் விலங்குகள் சந்தை, இறைச்சிச் சந்தையிலிருந்துதான் பரவியது என்ற செய்திகளையடுத்து உடனடியாக விலங்குகள் சந்தைகளை மூடுமாறு அமெரிக்க எம்.பி.க்கள் சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

america warns china to immediately close its wet market

சீனாவின் வூஹான் நகரில் வனவிலங்குகள் சந்தை படுமோசமான நிலையில் இருப்பதாகவும், மக்கள் கூட்டமும் அதிகம் இருப்பதாலும் வனவிலங்குகள் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு, அதன் அருகில் குழந்தைகள் விளையாடுவது சீனாவில் ஒரு சகஜமான காட்சி என்று சீனாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய வைரஸ் நிபுணர் பீட்டர் டஸாக் தெரிவித்துள்ளார்.

விலங்குகள் சந்தையில் கூண்டுகளில் வனவிலங்குகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு இறைச்சி, மீன் ஆகியவை விற்கப்படுகின்றன, இது எப்போதும் ஈரமாகவே இருப்பதால் வெட் மார்க்கெட் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலயில் சீன தூதருக்கு அளித்த கடிதத்தில் அமெரிக்க எம்.பி.க்கள், "உடனடியாக வெட் மார்க்கெட்டுகளை மூடுமாறு சீனாவுக்கு வலியுறுத்துகிறோம். இது மனித ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் இடமாக அது உள்ளது" என்று கூறியுள்ளனர்.

சீனாவின் வூஹானில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு இயக்குநர் காவோ ஃபூ தெரிவித்தார். கொரோனா வைரஸ் விலங்கிலிருந்துதான் மனிதருக்குப் பரவியிருக்கிறது என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது. ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை.

"சீன வாழ்க்கையில் வெட் மார்க்கெட்டுகள் முக்கியமானவை என்பதை நாங்கள் அறிவோம் ஆனால் அது தற்போது தினசரி வாழ்க்கையை உலகம் முழுதும் கெடுத்துள்ளது. இதனையடுத்து தீவிர முன்னெச்சரிக்கைத் தேவைப்படுகிறது" என்று அமெரிக்க செனட்டர்கள் சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

"சீனா உடனடியாக வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும், ஏகப்பட்ட நோய்கள் மனித-விலங்கு ஊடாட்டங்களால் ஏற்படும், அதை எப்படி திறந்து வைக்கின்றனர் என்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இன்னும் என்னதான் நடக்க வேண்டும்? இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? அவர்கள் இந்தச் சந்தைகளை மூட. நாம் இன்று அனுபவித்து வரும் துன்பம் அந்தச் சந்தைகளினால்தான்" என்று டாக்டர் ஃபாசி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அக்டோபர் 2006-லேயே கரண்ட் ஒபீனியன்ஸ் என்ற இதழில் எதிர்கால வைரஸ் நோய்க்கிருமிகள் சீன வெட்-மார்க்கெட்டுகளிலிருந்துதான் பரவும், அதன் மையம் வெட் மார்க்கெட்டுகள்தான் என்று கூறப்பட்டிருந்தது. வெட் மார்க்கெட்டுகள் மனிதர்களுக்கு அருகில் உள்ளது, இங்கு வைரல் சுமை அதிகம். அதாவது விறுவிறுவென்று பரவும் வைரஸ் வகைகள் அதிகம். இங்கிருந்துதான் மனிதர்களுக்கும் பரவுகிறது என்று அப்போதே எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் நிபுணர் பீட்டர் டஸாக் கூறும்போது, "அங்கு நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் விலங்குகளும் பண்ணைகளும் உள்ளன. வைரஸ் இன்னமும் கூட அங்கு இருக்கலாம். ஆகவே நாம் இதிலிருந்து மீண்டு வந்தாலும் இந்த வைரஸ் மீண்டும் வெடிக்கத் தயாராக இருக்கிறதா என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.