'பொண்ண எம்.பி.பி.எஸ் ஆக்கணும்' ... 'டெய்லர் தந்தையின் வைராக்கியம்'.... 'ஒரு நொடியில் தகர்ந்த மொத்த கனவு'... நொறுங்கி போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 02, 2020 01:57 PM

தான் கஷ்டப்பட்டாலும் தனது மகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என உழைத்த, ஏழை தந்தையின் கனவை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது இளம் பெண் மருத்துவரின் மரணம்.

Young Practitioners Killed in Road Accident at Corona detention

பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. டெய்லர் வேலை செய்து வரும், இவர் தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை, கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். மகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு உழைத்த அவரது கனவு நிறைவேறியது. அகிலா பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து பெரும் சிரமங்களுக்கு இடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்த அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க, அவரது பணியை மருத்துவமனை நிர்வாகம் மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இந்த சூழ்நிலையில்  கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றைப் பெற பூவந்தி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் (23) மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வாங்கி கொண்ட அகிலா, மனதில் பெரும் மகிழ்ச்சியோடும், அப்பாவிடம் தான் மருத்துவர் ஆகி விட்டேன் என்ற சந்தோச செய்தியைக் கூறுவதற்காக நண்பரோடு பைக்கில் வந்துள்ளார். அப்போது குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பணன் என்பவர் அகிலா வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கிக் காயமடைந்த மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச்சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து பெரும் கஷ்டங்களுக்கு நடுவில் நன்றாகப் படித்து, 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பினை நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இறந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமல்லாது, சக மருத்துவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு அகிலா குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.