சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம்..? அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
![Minister VijayaBaskar explain why corona patients increase in Chennai Minister VijayaBaskar explain why corona patients increase in Chennai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/minister-vijayabaskar-explain-why-corona-patients-increase-in-chennai.jpg)
தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 176 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் சோதனைகள் நடத்தப்படுகிறது. சென்னையில் பாதிப்புகள் அதிகம் என கேள்வி எழுப்பப்படுகிறது. சென்னையில் இன்று (01.05.2020) மட்டும் 3,200 மாதிரிகள் எடுக்கப்ப்ட்டுள்ளன. இங்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் நாம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம். பத்திரிக்கை நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும், அந்த பத்திரிக்கை அலுவலகம் முழுவதும் நாம் பரிசோதனை செய்ததில் ஒரே அலுவலகத்தில் 30 நபர்களுக்கு பாசிட்டீவ் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து வேறு யாருக்கும் பரவாமல் இருக்க அவர்கள் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. நல்லவேளையாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்தியாவிலே தமிழகத்தில்தான் டெஸ்ட்டிங் லேப் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான டெஸ்ட்களை எடுத்துள்ளோம். நாம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் சுகாதாரப்பணியாளர்களுடன் உரையாற்றி வருகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளையும் முதல்வரின் அறிவுரைப்படி செய்து வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)