'கொரோனா பரவலின் மையம் ஆனதா கோயம்பேடு?...' 'அரியலூர், கடலூர் சென்ற 27 தொழிலாளர்களால்...' 'ஊரடங்கை அறிவித்த மாவட்டங்கள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 02, 2020 01:09 PM

கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்துவிட்டு அரியலூர், கடலூர் திரும்பிய தொழிலாளர்கள் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

koyambedu workers returning home-Risk of corona transmission

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அங்கு கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் என 38 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்துவிட்டு அரியலூருக்கு திரும்பிய 19 தொழிலாளர்கள் மற்றும் பெரம்பலூர் திரும்பிய ஒரு தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரியலூரில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல், கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், சிதம்பரம் அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடலூரிலும் நாளை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மட்டும் சுமார் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மாநிலமும் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேட்டில் பணியாற்றிய தொழிலாளர்கள் சென்றிருப்பதால் மிகப் பெரிய அளவில் சமூக தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுறது.