என்ன வாய்ஸ்-டா சாமி.. அசத்திய அரசுப்பள்ளி மாணவன்.. பள்ளிக்கல்வி துறை பகிர்ந்த சூப்பர் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் பாடும் வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்திருக்கிறது. மாணவரின் குரல் வளத்தை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் 'கலை திருவிழா' நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஓவியம், கேலிச்சித்திரம், நவீன ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, செவ்வியல் இசை என பல்வேறு கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் வட்டார அளவில் தேர்வாகும் தனிநபர் மற்றும் குழு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும். பின்னர், அதிலிருந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் தனிநபர் மற்றும் குழுக்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் 'கலையரசன்', 'கலையரசி' என்ற விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், தமிழக அளவில் தரவரிசையில் முதல் 20 இடங்களை பிடிப்பவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்" என்ற பாடலை உயிரோட்டத்துடன் பாடும் வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கலைத்திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட போட்டியில் இந்த மாணவர் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். மேலும், அந்த பதிவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் டேக் செய்யப்பட்டிருக்கிறது.
ஊரெல்லாம் உன் பாட்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடலை உயிரோட்டத்துடன் அரசு பள்ளி மாணவர் ஒருவர் பாடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் மாணவரின் குரல் வளத்தை பாராட்டி வருவதோடு, தமிழக அரசின் இந்த முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
ஊரெல்லாம் உன் பாட்டுத் தான்... #TNGovtSchoolsKalaiThiruvizha |#Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED |#TNGovtSchools | #TNEducation | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh pic.twitter.com/yVZtwsi1DB
— தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) December 6, 2022

மற்ற செய்திகள்
