கள்ளக்குறிச்சி: கதறி அழுதபடி மாணவி உடலை வாங்கிக் கொண்ட பெற்றோர்.... இறுதிச் சடங்கில் விதிக்கப்பட்ட தடை..முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று அதிகாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் வெளியூர் நபர்கள் பங்கேற்க அனுமதியில்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சோகம்
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி மரணமடைந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் இதேபோல மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி போராட்டத்தில் குதித்தனர் மக்கள். இதில், பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் கள்ளக்குறிச்சியில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வழக்கு
இந்நிலையில், மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், தங்களது தரப்பு மருத்துவரை உடற்கூராய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மாணவியின் தந்தை. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் மாணவி தரப்பு மருத்துவரை நியமிக்க மறுத்துவிட்டனர் நீதிபதிகள். இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் மாணவியின் தந்தை. அங்கேயும் மறு உடற்கூறாய்வுக்கு மட்டுமே நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.
இதனிடையே மாணவியின் உடல் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவியின் உடலை பெற்றோர் வாங்கிக்கொள்ள வராததால் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளும்படி பெற்றோரின் வீட்டில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
சம்மதம்
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் உடலை வாங்கிக்கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர், உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கதறியழுதபடி அவர்கள் தங்களுடைய மகளின் உடலை பெற்றுக்கொண்டது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து, மாணவியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் இறுதி சடங்கில் வெளியூர் நபர்கள் யாரும் கலந்துகொள்ள கூடாது என காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே அங்கே போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
