"நித்யானந்தா மாதிரி இருக்கா?.." 18 அடி சிலைக்கு கும்பாபிஷேகம்??... கடும் குழப்பத்தில் பக்தர்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நித்யானந்தாவிற்கு சிலை வைத்தது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வந்த நிலையில், இதற்கான காரணம் அப்பகுதி மக்கள் மத்தியில், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி எல்லை பகுதியான விழுப்புரம் மாவட்டம், பெரம்பை பகுதியை அடுத்த ஐஸ்வர்யா நகரில், பாலாசுப்பிரமணியம் என்பவர், மலேசிய முருகன் கோவில் போன்ற கோவில் ஒன்றைக் கட்டி வந்துள்ளார்.
சுமார் 27 அடியில், முருகன் சிலை பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு ஸ்ரீ பத்துமலை முருகன் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நித்யானந்தா உருவத்தில் சிலை?
இதனைத் தொடர்ந்து, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் சமீபத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், இந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வந்த பொது மக்களுக்கு ஆச்சர்யம் கலந்து வியப்பு ஒன்றும் காத்திருந்துள்ளது. முருகன் கோவில் உள்ளே நுழையும் பகுதியில், சுமார் 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவத்தில், சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த சிலைக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
நித்தியானந்தா உருவத்தில் சிலையை பார்த்ததும், அங்கு வந்தவர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி இருந்தது. இது தொடர்பாக, கும்பாபிஷேகம் மேற்கொண்ட சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது, இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர் என்றும், ஸ்தபதி சிலையை சரியாக வடிவமைக்காத காரணத்தினால், நித்யானந்தா போல தோற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதே வேளையில், கோவில் நிர்வாகியான பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கே அறை முழுவதும் நித்யானந்தா புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், நித்யானந்தா புகைப்படங்களை வைத்து பாலசுப்பிரமணியன் பூஜை செய்து வந்துள்ளதும் தெரிய வந்தது.
சிவன் போல தோற்றம் அளித்து, நித்யானந்தா சிலை இருக்கும் புகைப்படத்தை அங்கு கும்பாபிஷேகம் வந்த பக்தர்கள் புகைப்படமாக எடுத்து வெளியிட, இணையத்தில் இந்த புகைப்படம் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
