"பாத்து பாத்து கஷ்டப்பட்டு கட்டுன வீடு'ங்க, இப்போ கண்ணும் முன்னாடியே.." 3 அடியால் வந்த பிரச்சனை.. தரைமட்டமான 1.5 கோடி ரூபாய் வீடு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த வீடு தரைமட்டமான சம்பவமும், அதனைக் கண்டு வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதது தொடர்பான நிகழ்வும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அருள் ஜோதி. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ராஜாஜி சந்தையில் இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
அருள்ஜோதி தனக்கு சொந்தமான இடத்தில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அடுக்குமாடி வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
உரிய அனுமதி இல்லை..
இந்நிலையில் தான், அருள்ஜோதியின் அண்டை வீட்டாரான குப்புசாமி என்பவர், தனக்கு சொந்தமான 3 அடி இடத்தையும் சேர்த்து, அருள்ஜோடி வீடு கட்டி உள்ளதாக புகார் ஒன்றை அளித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் அருகே, சுமார் 300 மீட்டர் தொலைவில் எந்த ஒரு கட்டிடத்தைக் கட்டினாலும், அதற்கு முன்பு தொல்லியல் துறையின் அனுமதியை பெற வேண்டும் என்னும் விதி ஒன்று உள்ளது. ஆனால், அருள்ஜோதி தொல்லியல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் எந்த உரிய அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீட்டை இடிக்க உத்தரவு..
இது பற்றியும் குப்புசாமி தொடுத்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணை, கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்துள்ள நிலையில், அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த அருள் ஜோதியின் வீட்டை இடிக்க தொல்லியல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
கண்ணீர் விட்ட உரிமையாளர்கள்
நீதிமன்ற உத்தரவின் படி, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தினரும், தொல்லியல் துறை அலுவலர்கள் ஆகியோரும் காவல்துறை பாதுகாப்புடன் அருள்ஜோதியின் வீட்டை இடிக்கத் தொடங்கினர். பார்த்து பார்த்து கட்டிய வீடு, கண்முன்னேயே சுக்கு நூறாக உடைந்து தரைமட்டம் ஆவதைக் கண்டு, அருள்ஜோதி குடும்பத்தினர் கதறி அழுதனர்.
Also Read | நிலவில் உருவான 92 அடி பள்ளம்.. "இப்படி நடக்க சான்ஸே இல்லை" என குழம்பும் ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!

மற்ற செய்திகள்
