சர்க்கார் சுந்தர் ராமசாமி ஸ்டைலில் ஓட்டுப்போட.. அமெரிக்காவில் இருந்து வந்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஒட்டுப் போடுவதற்காக சொந்த ஊர் வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இருந்தன.
வேட்புமனு பரிசீலனையில் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இருந்து..
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகனான இம்தியாஸ் ஷெரீப் என்பவர் அமெரிக்காவில் சொந்தமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். அவர், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளி வாக்குப்பதிவு மையத்திற்கு இன்று காலை வந்த இம்தியாஸ் ஷெரீப் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
என்னுடைய கடமை
இது குறித்துப் பேசிய இம்தியாஸ் ஷெரீப்,"நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, அதன் மூலம் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வந்து வாக்களித்தேன். தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன். அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்'" என்றார்.
தேர்தலில் ஓட்டுப்போட உள்ளூர் வாசிகளே சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து ஒருவர் சொந்த ஊர் திரும்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
