யாருக்கு 'ஓட்டு' போட்டீங்க?... 'சத்தியம்' பண்ணு... மிரட்டிய வேட்பாளர்களால் 'அரண்டு' போன வாக்காளர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 04, 2020 11:58 PM
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள், சேவல் ரத்தத்தின் மீது சத்தியம் செய்யச் சொல்லி, வாக்காளர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிகத்தில் தேர்தலின்போது வாக்குக்கு பணம் வழங்குவது சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக மாறிப்போயுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முதல், உள்ளாட்சித் தேர்தல் வரை, வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. என்னதான் தேர்தல் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டாலும் அதையும் மீறி சில பகுதிகளில் வாக்குக்கு பணம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்த மக்களை சேவல் ரத்தத்தில் சத்தியம் செய்யச் சொல்லி வேட்பாளர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 4 பெண்கள் போட்டியிட்டனர்.
இதில் தோல்வியடைந்த 3 பெண்கள், தங்களிடம் வாக்களிக்க பணம் பெற்ற கிராம மக்களை ஊர் மத்தியிலுள்ள சமுதாய கூடத்துக்கு அழைத்து வந்து சேவலை அறுத்து ரத்தம் பிடித்து, அதன்மீது சத்தியம் செய்யும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
