அறிவாலயத்தை அலங்கரிக்கப் போகும்... 'அடுத்த பொதுச் செயலாளர் யார்!?'... திமுக-வில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுகவில் மிக நீண்ட காலமாக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன் சமீபத்தில் மறைந்ததை அடுத்து, அந்த பதிவிக்கு திமுகவில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதைப் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

43 ஆண்டுகள் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, புதிய பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக-வில் கட்சி தலைவருக்கு அடுத்த மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாக கருதப்படுகிறது.
கட்சியின் மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், ஐ. பெரியசாமி, பொன்முடி ஆகியோரின் பெயர்கள் பொதுச் செயலாளர் போட்டியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால், அவருக்கே பொதுச்செயலாளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.
இந்த கணிப்பை வலுப்படுத்தும் விதமாக, துரைமுருகன் தற்போது கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து, திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 29ம் தேதி பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த பதவிக்குப் போட்டியிட துரைமுருகன் கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலகியுள்ளதால், 29ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆகும் பட்சத்தில் அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி டி.ஆர். பாலு அல்லது ஐ. பெரியசாமிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
