'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 01, 2020 10:15 AM

ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதியில் வசிக்கும் 1,800 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் : 7500 people from 1800 families were isolated in Erode

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதோடு அவர்கள் தங்கியிருந்த பகுதிகள், அருகில் உள்ள வீதிகள் ஆகியன தனிமைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் கருமாயாவீதி, ராமர் எக்ஸ்டன்சன், தேர் வீதி, வாய்க்கால்ரோடு, ஜெயராம் வீதி, கிட்டாச்சாமி வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, கடை வீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களிடம் சென்று எதற்காக மக்கள் தனிமைபடுத்தபடுகிறார்கள் என்பது குறித்து விளக்கமளித்தனர்.

இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வராத வகையிலும், மற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத வகையிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறும்போது, ''கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கோபியில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர், காய்கறி, மருந்து போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்'' என கூறினார்கள்.

Tags : #CORONA #CORONAVIRUS #ERODE #ISOLATED #கொரோனா வைரஸ்