‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’... ‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது’... இவையெல்லாம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 24, 2020 07:26 PM

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

144 ban in Tamil Nadu came into force. What are you getting?

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி,

அரசு, தனியார் பேருந்துகள், கால் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது. 

5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையின் தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆவின் மற்றும் பால் ஒன்றியங்கள் செயல்படலாம். போதிய இடைவெளியுடன் மக்கள் கலந்துகொள்ளும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்படலாம். மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள் உற்பத்திப் பிரிவுகள் ஆகியவை செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள், பால், ரொட்டி, பழங்கள், காய்கறிகள், மாமிசம், முட்டை, மீன் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் அழியக் கூடிய பொருட்கள் தொடர்பான விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு.

ரிசர்வ் வங்கி வழிமுறைகளின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படலாம்.

நுகர்வோருக்கு பார்சல் செய்து கொடுக்கும் வகையில் உணவகங்கள் செயல்படலாம். தேநீர் கடைகள் செயல்படலாம். ஆனால், மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

மின்னணு வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. 

பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் செயல்படும். ஆம்புலன்ஸ் சேவைகள் தடையின்றி கிடைக்கும்.

வேளாண்மைப் பொருட்கள் தொடர்பான கடைகள் மற்றும் சந்தைகள் செயல்படலாம். அனைத்து நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி அடிப்படையில் செயல்படலாம்.

லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் இயங்கலாம். மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்களை இயக்கலாம்.

மின்சாரம், குடிநீர் விநியோகம், தபால், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. குடோன்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் செயல்படும். கடைகளுக்கு வரும் மக்களுக்கு இடையே 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும். மேலும் கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள் எனவும் ரேஷன் கடைகள் மற்றும் அதுதொடர்பான அலுவலகங்கள் செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலக நாடுகளை கொரோனா உலுக்கி கொண்டிருப்பதால், அதன் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து, மக்கள் அரசுக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்மறையான கருத்துக்களுக்கு இடமளிக்காமல், ஒருமித்த கருத்துகளுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர்

விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : #CORONAVIRUS #144 #IMPOSED #IMPLEMENTED #TAMIL NADU