‘பகல் எது, இரவு எதுனு தெரியாம லாரியிலேயே கிடந்தேன்’.. ‘ஊரடங்கு முடிஞ்சிரும்னு இருந்தேன்’.. ‘ஆனா..!’.. லாரி டிரைவர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 12, 2020 03:45 PM

ஊரடங்கு அறிவிப்பால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் லாரியிலேயே 40 நாள்கள் தங்கிருந்த அனுபவம் குறித்து லாரி டிரைவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Lorry driver who spent 40 days in his vehicle amid lockdown

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அந்நிறுவன வேலைக்காக கடந்த மார்ச் 22ம் தேதி டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு லாரியில் கிளம்பியுள்ளார். டெல்லி-ராஜஸ்தான் எல்லையில் மார்ச் 23ம் தேதி அவர் சென்றுகொண்டிருந்தபோது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் ராஜஸ்தானுக்குள் செல்ல அனுமதி கிடைக்காமலும், திரும்ப டெல்லி செல்ல முடியாமலும் ராஜஸ்தான் எல்லையிலேயே சிக்கி தவித்துள்ளார். பின்னர் வேறு வழியின்றி லாரியிலேயே தங்கியுள்ளார். கிட்டத்தட்ட 40 நாட்கள் லாரியிலேயே நேரத்தை கழித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த சுனில், ‘நான் லாரியில் அரிசியும், ஸ்டவ் அடுப்பும் வைத்திருந்தேன். அதை வைத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஆனால் சில நாட்களில் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போயின. பின் அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டேன். பகல் எது இரவு என்ற வித்தியாமெல்லாம் தெரியாத அளவுக்கு லாரிக்குள்ளேயே இருந்தேன். சில நாள்கள் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இரவை கழிப்பேன்.

ஏப்ரல் 24ம் தேதி ஊரடங்கு முடிந்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சில நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றமுடியாமல் குடும்பத்தினருடன் பேச முடியாமல் தவிப்பேன். இந்த 40 நாள்களில் என் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின. என் கர்ப்பிணி மனைவியை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாமல் வாடினேன். வீட்டிற்கு செல்ல முடியுமா, முடியாதா என தினமும் யோசிப்பேன்.

40 நாள்கள் கடந்த பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்பட்டது. உடனே லாரியை எடுத்துக்கொண்டு மே 5ம் தேதி டெல்லிக்கு சென்றேன். அங்கு லாரியை ஒப்படைத்துவிட்டு மே 9ம் தேதி சொந்த ஊருக்கு வந்தேன். எனக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என வந்தது. ஆனால் நான் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்போது வீட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி என் மனைவியின் பிரசவம் முடிந்த பின்னரே டெல்லி செல்வேன். வீட்டில் தூங்கும்போது சில நேரம் லாரியில் தூங்குவது போலவே தோன்றும்’ என தெரிவித்துள்ளார்.