"என்னால முடியல, ஏதாச்சும் பண்ணுங்க".. பக்கத்துக்கு வீட்டு கிளியால் வருந்திய முதியவர்.. "கடைசி'ல போலீஸ் வர போயிடுச்சே.."
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பக்கத்து வீட்டில் உள்ள கிளி மற்றும் உறவினர் தொடர்பாக கொடுத்துள்ள புகார் ஒன்று, தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகவே, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், அண்டை வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது தொந்தரவோ, பிரச்சனையோ கொடுத்தால், அது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கக் கூட துணிவார்கள். அப்படிப்பட்ட செய்திகள் நாம் நிறைய கடந்து வந்திருப்போம்.
அப்படி ஒரு சூழ்நிலையில், புனே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கிளி மற்றும் அதன் உரிமையாளர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புனேவின் சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் சிண்டே. 72 வயதாகும் இந்த நபரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர், தன்னுடைய வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், தனது கிளியை வீட்டிற்கு வெளியே கூண்டு ஒன்றில் அவர் போட்டு வளர்த்து வந்துள்ளார். பொதுவாக, ஒரு கிளியுடைய இயல்பு என்றாலே, கீச்சிட்ட படியும், விசில் அடித்தபடியும் இருப்பது தான். அப்படி இருக்கும் நிலையில், சுரேஷின் பக்கத்து வீட்டில் உள்ள கிளி, சத்தம் போட்டுக் கொண்டே இருப்பது, தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கிளியை வீட்டிற்குள் எடுத்து வைக்குமாறும், கிளியின் உரிமையாளரிடம் சுரேஷ் தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடுகிறது. ஆனாலும், அந்த நபர் கேட்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தொடர்ந்து கிளியின் உரிமையாளரிடம் சுரேஷ் அறிவுறுத்தவே, ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே தகராறு உருவானதாகவும் கூறப்படுகிறது.
வயதான சுரேஷ் சிண்டேவோ, கிளியின் உரிமையாளர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர் வளர்த்து வரும் கிளி கீச்சிடுவது தனக்கு தொந்தரவாக இருக்கிறது என்றும், நேரடியாக கூறியும் அவர் அதனை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை என்றும், இதனால் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கிளியின் உரிமையாளர் மீது அமைதியை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றிற்காக அடையாளம் காண முடியாத குற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த குற்றம் தொடர்பாக அவரின் வீட்டிற்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
கிளியின் சத்தம் காரணமாக தொடங்கிய பிரச்சனை, போலீஸ் கேஸ் வரை சென்றுள்ள சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
