தளபதி விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேனா ? - பிரபல இயக்குநர் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் படத்தினை நான் இயக்கவில்லை என அவரை வைத்து திருமலை மற்றும் ஆதி ஆகியப் படங்களை இயக்கிய இயக்குனர் ரமணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Director Ramana Clarifies About His Next With Thalapathy Vijay

விஜய் நடிப்பில் 'பிகில் 'தற்போது தயாராகி வருகிறது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதையடுத்து அவரது 65 ஆவது படத்தை இயக்க இயக்குனர் பேரரசு ஒப்பந்தமாகியிருப்பதாகவும் மேலும் இயக்குனர் ரமணாவும் அவரை வைத்து படம் இயக்க முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாகவும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குனர் ரமணா அறிக்கை ஒன்றை முகநூலில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் ரமணா.

அனைவருக்கும் வணக்கம்,

இன்று காலை தமிழ் நாளிதழ், படித்தேன். அதில், பக்கம் 9-ல் நடிகர் தளபதி திரு. விஜய் அவர்கள் தற்போது நடித்துவரும் படங்களுக்குப் பிறகு 65-ஆவது படத்தை எனது மதிப்பிற்குறிய நண்பரும் இயக்குநருமான பேரரசு அவர்களின் இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்தி பிரசுரமாகி உள்ளது.

அச்செய்திப்படி, அப்படி அந்தப் படம் அவர்கள் இருவரும் இணைந்து நடைபெறுமானால், சம்பந்தப்பட்ட இருவரும் என் நண்பர்கள் என்ற முறையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால், அச்செய்தியின் தொடர்ச்சியாக நான்(ரமணா) நடிகர் தளபதி திரு.விஜய் அவர்களை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது

என் தனிப்பட்ட நலனில் நல்லது நடக்க நினைக்கும் தினத்தந்தி நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஆனால், அச்செய்தியில் துளியும் உண்மையில்லை என்பதும், நான் தினத்தந்தி நாளிதழ் நிருபரிடமோ அல்லது வேறு எந்த ஒரு பொது ஊடகத்திலோ அப்படி ஒருபொழுதும் கூறவில்லை என்பதையும், நான் தற்போது நடிகர் தளபதி திரு. விஜய் அவர்களை வைத்து படம் இயக்குவதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இப்பதிவின் மூலம் ஊடகங்களுக்கும், பொது உலகிற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் தனிப்பட்ட முயற்சியில் படம் இயக்க இருப்பதும், அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருப்பதும் நிஜம். ஆனால், அது தளபதி திரு. விஜய் அவர்களை வைத்து அல்ல. எவர் ஒருவரையும் அவர் அனுமதியில்லாமல் பேசவே விரும்பாதவன் நான். அப்படியிருக்க, நடிகர் தளபதி திரு.விஜய் அவர்களுக்கோ, அவரின் புகழுக்கோ தர்மசங்கடத்தை விளைவிக்க இன்றும், என்றும் விரும்பமாட்டேன். அது திரு.விஜய் அவர்களுக்கும் தெரியும்.

இயற்கையும், காலமும் எங்களிடையே அப்படி ஒரு சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் வழங்குமானால் அப்போது அதுகுறித்து நானே அச்செய்தியை வெளியிடும் நேர்மையும், பண்பும் எனக்குண்டு. அதனால் இன்று தினத்தந்தியில் வெளியாகியுள்ள செய்தியில் எனக்கு எந்தவித ஒரு தொடர்பும், பங்கும் இல்லை. அது அந்த நாளிதழின் தனிப்பட்ட அபிப்பிராயமும், கருத்தும், செய்தியும் ஆகும். என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Vijay, Ramana