'ஆறு மாத கர்ப்பம்' ... 'மூச்சு விடவும் சிரமம்' ... 'தயவு செஞ்சு வெளிய வராதீங்க' ... மீண்டு வந்த கர்ப்பிணியின் கொரோனா நாட்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனை சேர்ந்த 39 வயதான கரேன் மேன்னரிங்கிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக அவர் கர்ப்பம் அடைந்திருந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இரண்டு வார சிகிச்சைக்கு பின் அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார். இவர் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அங்கிருந்து தனக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ள கரேன் மேன்னரிங் தனது மருத்துவமனை நாட்கள் குறித்து கூறுகையில், 'முதல் இரண்டு, மூன்று நாட்கள் படுக்கையிலே நகர்ந்தது. நான் ஒவ்வொரு முறை மூச்சுவிடும் போதும் கடுமையான போராட்டத்தை நிகழ்த்தினேன். எனக்காக மட்டுமில்லாமல் எனக்குள் இருக்கும் என் குழந்தைக்காகவும் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் அப்படி மூச்சுவிட சிரமப்படும் போது எல்லாம் என்னருகில் செவிலியர்கள் சிறப்பு கவசங்கள் அணிந்து வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். என் அருகில் என் குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை. என்னை சமாதானப்படுத்திக் கொள்ள அவர்கள் அவ்வப்போது தொலைபேசியில் என்னை அழைத்து பேசுவார்கள்' என்றார்.
'நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு என் கணவருடன் காரில் வரும்போது என் மீது பட்ட குளிர்ந்த காற்றை என்னால் மறக்க முடியாது. எதோ புதிதாக உணர்ந்தேன். என் உடல்நலம் தேறி வருகிறது. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கைகளை நன்றாக கழுவுங்கள். தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம். என் உடல்நலனில் அக்கறை செலுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி' என தெரிவித்துள்ளார்
