'மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...' 'கொரோனா வைரஸ்' தானாக 'அழிந்துவிடும்...' 'ஆறுதல் அளிக்கும் விஞ்ஞானியின் கூற்று...'
முகப்பு > செய்திகள் > உலகம்மருந்து கண்டுபிடிக்கும் முன்பே, கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கூறி உள்ளார்.

உலக நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை சுமார் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 48 லட்சத்திற்கும்மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, 2002ம் ஆண்டு பரவியல் சார்ஸ் மற்றம் 2012ம் ஆண்டு பரவிய மெர்ஸ் ஆகிய நோய்களுக்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுபோலவே இந்த வைரசுக்கும் மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இருப்பினும் காற்றில் பரவக் கூடிய தன்மைஇருப்பதால் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் இந்தமுயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, சீனாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அதை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்தை கண்டுபிடித்து, அதை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை பெறுவதில் அமெரிக்காவும் தீவிரமாக இருக்கிறது.
இருப்பினும் உலக மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் பக்க விளைவுகள் அற்ற மருந்துக்கே அனுமதி வழங்கும் என்பதால், கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் கொரோனாவுக்கான மருந்து இன்னும் சில மாதங்களில் கண்டுபிடிக்கப்படுமா? அல்லது சில ஆண்டுகள் ஆகுமா? என்பது பற்றி விஞ்ஞானிகளால்கூட கணிக்க முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையே, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த நோய்க்கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான கரோல் சிகோரா தனது ‘டுவிட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தாம் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிப்படியாக தானாகவே அழிந்துவிடும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
