'கட்டுக்குள் வராத கொரோனா...' 'மீண்டும் ரெட் ஜோனாக மாறும் கோவை...' 'தொழில் நகரம் முடங்கும் அபாயம்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸிற்கு புதிதாக ஒருவர் பலியானதால் கோவைக்கு மீண்டும் ரெட் ஜோனாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி, ஒரு மாவட்டத்தில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த மாவட்டம் ’ரெட் ஜோன்’ மண்டலமாக அறிவிக்கப்படும். அதற்கு கீழ் இருந்தால் அது ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி கோவை ஆரஞ்சு மண்டலமாக இருந்து வந்தது. இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். மேலும் வேலாண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி என நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. தற்போது வரை கோவையில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்த நோயாளிகள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வைரஸ் தொற்றால் பலியாகி இருக்கிறார்.
இவ்வாறு திடீரென உயர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை, உயிரிழப்பு ஆகிய காரணங்களால் கோவை மீண்டும் 'ரெட் ஜோன்' வளையத்திற்குள் கொண்டு வரப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை 'ரெட் ஜோன்' வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொழில் நகரமான கோவை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
