டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, தேர்வு அறிவிப்பு வெளியீடு.. வயது, தகுதி , காலியிடங்கள் முழு விவரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று என்றும் வரும் மே 21ஆம் தேதி முதற்கட்ட தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார். இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் 23ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் மார்ச் 23ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, தற்போது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.
முதற்கட்ட தேர்வு எப்போது?
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது. மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
எந்தெந்த பதவிகள்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், நகராட்சி ஆணையர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படும்.
தேர்வு நேரம் மாற்றம்
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வந்த தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை தேர்வு நடைபெறும். பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
