'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 07, 2020 03:37 PM

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும், அப்போது பயணிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பேருந்து பணிமனை ஆகியோர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

TN Government bus operation after COVID19 lockdown rules

அதில்,

1. அரசுப் பேருந்து கழகங்கள் பின்பற்ற வேண்டியவை:

50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். பின்புற படிக்கட்டில் ஏறி முன்புற படிக்கட்டில் பயணிகளை இறக்க வேண்டும். டிரைவர், நடத்துனருக்கு கிருமிநாசினி, மாஸ்க் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவும்.

2. பயணிகள் பின்பற்ற வேண்டியவை:  

முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாதப்பட்சத்தில், பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்படும். அமரக் குறியீடு குறிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் பேருந்தில் நிற்கவோ/ உட்காரவோ வேண்டும் (சமூக இடைவெளிவிட்டு). பேருந்து நிலையத்திலும், பேருந்தில் ஏறும் போதும்/இறங்கும் போதும்  சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் (குறைந்தது, 1.8 மீட்டர்  இடைவெளி). பேருந்துகளில் ஏ.சி போடுவதை தவிர்க்கலாம். ஜன்னலை திறந்து வைப்பது நல்லது.

3. பணப் பரிமாற்ற முறைகள்:  

சில்லரை பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும். மொபைல் பேமன்ட், க்யுஆர் பேமன்ட் மற்றும் பே.டிஎம், கூகுள் பே, ஜியோ பே போன்ற இ-பேமன்ட் மூலம் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். அல்லது மாதந்திர அனுமதி அட்டை பயன்படுத்தலாம்.

4. பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டியவை:  

பணிக்கு செல்வதற்கு முன்பு கட்டாயம் உடல் வெப்ப நிலை  சோதனை செய்யப்படும். ஓட்டுனர்  இருக்கும் இடங்கள் வெளிப்படையான திரை மூலம் தனிமைப்படுத்தப்படும். முகக்கவசம் மற்றும் கையுறையை  கட்டாயம் அணிய வேண்டும்.

5. நடத்துனர் பின்பற்ற வேண்டியவை:

பணிக்கு செல்வதற்கு முன்பு கட்டாயம் உடல் வெப்ப நிலை  சோதனை செய்யப்படும். முகக்கவசம் மற்றும் கையுறையை  கட்டாயம் அணிய வேண்டும். கை சுத்திகரிப்பானை தங்கள் கையில் வைத்துக் கொள்ளலாம்.

6. பணிமனைகள் பின்பற்ற வேண்டியவை:

5 மீட்டர் இடைவெளியில் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும். கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ஊழியர்களை பயன்படுத்த வேண்டும். பணிமனைகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.