'எப்போது பொது போக்குவரத்து தொடங்கப்படும்?’... ‘மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த புதிய தகவல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 06, 2020 09:21 PM

கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், விரைவில் பொது போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Coronavirus lockdown: Public Transport May Open Soon With Guidelines

மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமை மண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளிலிருந்து விதி விலக்கு அளித்துள்ளது. எனினும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது. இதனால் பல்வேறு மாநில மக்களும் கவலையில் உள்ளனர். இந்நிலையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பேருந்து மற்றும் கார் உரிமையாளர்களின் கூட்டமைப்புடன் காணொலி மூலம் பேசினார்.

அதில், ‘போக்குவரத்தையும், நெடுஞ்சாலைகளையும் திறப்பது, மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றும். அதனால் பொது மக்களுக்கான போக்குவரத்து சில விதிமுறைகளுடன் விரைவில் திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். ஆனால் பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும்போது முகக் கவசங்கள் அணிதல், கைகளைக் கழுவுதல், சுத்திகரிப்பான் மூலம் தூய்மைப்படுத்துதல் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது மற்றும் சமூக இடைவெளியைத் தொடர்வது ஆகியவை மிகவும் அவசியம் என்பதால், அவவைகளை பின்பற்றுவது குறித்த எச்சரிக்கையுடன் தொடங்கப்படும்’ என தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பேருந்து மற்றும் கார் உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்து அரசு முழுமையாக அறியும் என்றும், அவர்களின் பிரச்சினைகளை அகற்ற அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறிய அவர், பொதுமக்களுக்கான போக்குவரத்துத் துறையில், அரசு நிதி குறைவாகவும், தனியார் முதலீடு வளரும் வகையிலும் உள்ள, லண்டன் மாதிரியிலான பொதுப் போக்குவரத்து முறையைப் பின்பற்றுவது குறித்து, தமது அமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.