"ஸ்கூல் கட் அடிச்சிட்டு எம்ஜிஆர் படத்துக்கு போனப்போ, போலீஸ் புடிச்சுட்டாங்க".. பள்ளிப் பருவத்தில் நடந்ததை நினைவுகூர்ந்த முதல்வர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தம்முடைய 70 ஆவது பிறந்த நாளை வரும் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

Images are subject to © copyright to their respective owners
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வராக இருந்த திமுக மூத்த தலைவர் கலைஞர். மு.கருணாநிதியின் மகன் ஆவார். கலைஞரின் மறைவுக்கு பின், திமுக கட்சிக்காக செயல்பட்டு வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து மக்கள் குறித்த பல பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் இறங்கி அதனை சரி செய்வதிலும் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அதே போல, அவரது கேள்விகளுக்கு அசாத்திய பதில்களை அளித்து அனைவரையும் அசர வைத்துள்ளார் முக ஸ்டாலின். மேலும் அரசியல் தாண்டி தனது பெர்சனல் விஷயங்கள் பலவற்றையும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பகிர்ந்து கொண்டார். தனது திருமணம் குறித்தும், பிள்ளைகள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பற்றியும் பேசி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
இதில் தனது பள்ளிக்கால நண்பர்கள் குறித்து பேசி இருந்த தமிழக முதல்வர் MK ஸ்டாலின், சில நண்பர்களின் பெயரைக் குறிப்பிட்டு, "அப்போது நாங்க ஒன்னா தான் இருப்போம். அடிக்கடி சினிமாவுக்கு எல்லாம் போவோம். ஸ்கூலை கட் பண்ணிட்டு கூட நாங்க சினிமாவுக்கு போயிருக்கோம். சைக்கிள்ல அப்போ எல்லாம் டபுள்ஸ் போகக்கூடாது. இப்ப அதுக்கு அனுமதி கிடைச்சிருச்சு, அப்ப எல்லாம் போகக்கூடாது. அந்த சமயத்துல நாங்க மதியம் மேட்னி ஷோக்கு டபுள்ஸ் போயிட்டு இருக்கோம் சைக்கிள்ல.
"புதிய பூமி"ன்னு எம்ஜிஆர் படம் குளோப் தியேட்டருக்கு பார்க்க போயிட்டு இருந்தோம். அங்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல எங்களை நிறுத்தி, போலீஸ் ஸ்டேஷன்ல எங்கள உள்ள புடிச்சு போலீஸ் உட்கார வெச்சாங்க. அப்போ ஒரு வேடிக்கையான சம்பவம் கூட நடந்துச்சு. என்னோட நண்பர்கள் பெயர் எல்லாம் கேட்டாங்க, அதெல்லாம் டைரில குறிச்சு வச்சுக்கிட்டாங்க.
என்னுடைய பெயரை கேட்டாங்க. நான் முக ஸ்டாலின்னு சொன்னேன். அப்பா பெயரை கேட்டார்கள், மு.கருணாநிதின்னு சொன்னேன், அட்ரஸ் கேட்டாங்க அதையும் சொன்னேன். அப்பா எங்க வேலை செய்றாருன்னு கேட்டாங்க, நான் கோட்டையிலேன்னு சொன்னேன். அப்பறம் என்ன வேலைன்னு கேக்குறப்போ, நான் பொதுப்பணித்துறை அமைச்சரா இருக்காருன்னு சொன்னேன்.
முதல்லேயே சொல்லக்கூடாதான்னு அவங்க அதிர்ச்சி அடைஞ்சாங்க. ஆனா, 'உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு தோணுதோ அதை தாங்க'ன்னு நான் சொன்னேன். அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் அங்க உட்கார வைச்சுட்டு அனுப்பி விட்டாங்க" என முதல்வர் ஸ்டாலின் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மற்ற செய்திகள்
