"போர்களில் எல்லாம் வெற்றிமுரசு கொட்டிய மும்முடிச்சோழன்".. ராஜராஜ சோழரின் சதயவிழா.. வைரலாகும் முதல்வர் முக.ஸ்டாலினின் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாமன்னர் ராஜராஜ சோழரின் சதயவிழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நிலையில், இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

சோழர் குலத்தின் மாணிக்கம் என்று அன்புடன் அழைக்கப்படும் அருண்மொழிவர்மன் தஞ்சை பெரிய கோவிலை கட்டி வரலாற்றில் நீங்கா புகழ் பெற்றவர். அரசரான பிறகு அவரது சாதனைகளை போற்றும் விதத்தில் அவருக்கு ராஜராஜ சோழன் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. இன்றும் சோழர் குல வரலாற்றில் மிக முக்கிய மன்னராக ராஜராஜன் அறியப்படுகிறார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 1,037-வது சதய விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 48 மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கூடினர்.
நேற்று கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து இன்று காலை ஓதுவார் மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதனால் தஞ்சாவூரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று, மாமன்னர் சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்!
அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! pic.twitter.com/R5q11gGWNU
— M.K.Stalin (@mkstalin) November 3, 2022
Also Read | ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா.. ஸ்டைலாக வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!

மற்ற செய்திகள்
