‘அரசியலில் கமலுடன் சேர்வீர்களா?’... ‘ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்’... நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியப்பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோனைக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், அரசியல் நிலவரங்கள் குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ‘கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்கள் நிறைய கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு நான் அளித்த பதில் திருப்தியாக இருந்தது. ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்’ என தெரிவித்தார்.
கமலுடன் சேர்ந்து அரசியல் வெற்றிடத்தை நிரப்புவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ‘நேரம் தான் பதில் சொல்லும்’ என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சிஏஏ விவகாரத்தில் பிரதமர் மற்றும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறினேன். பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை உதவி செய்வதாகவும் கூறினேன் என்று தெரிவித்தார்.
