“பொதுமக்களை துப்பாக்கியால் சுட்ட திருவாடுதுறை ஆதீனம் மெய்க்காவலர்”!... பதற வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | May 06, 2019 02:44 PM
திருவாடுதுறையில் பொதுமக்கள் மீது காவலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே திருவாடுதுறை ஆதீனத்தின் மடம் உள்ளது. இதில் ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியருக்கு மெய்க்காவலராக இருப்பவர் ஜெகன்ராஜா. இவர் நேற்று (05/05/2019) இரவு திருவாடுதுறை கடை வீதியில் குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்களிடம் ஜெகன்ராஜா தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிபோதையில் இருந்த மெய்க்காவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அருகில் நின்று கொண்டிருந்த மதி என்பவரின் காலில் சரமாரியாக சுட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட அந்த பகுதி நாட்டாமை செல்வராஜ் என்பவரையும் சரமாரியாக காலில் சுட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் மெய்க்காவலரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன்ராஜா தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
