"எவ்வளவு சொல்லியும் கேக்கல"..மருமகனுக்கு மாமனார் போட்ட ஸ்கெட்ச்.. பரபரப்பு வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). இவருடைய மனைவி பெயர் இந்திரா. இந்த தம்பதியின் மகள் நிஷாந்தி (22). அணுமின் நிலையத்தில் பணிபுரிந்துவந்த ராஜேந்திரனை கொலை வழக்கில் தற்போது போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில் ராஜேந்திரன் சொன்ன விஷயம் அனைவரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
![Man arrested in Kalpakkam after he killed his Son in law Man arrested in Kalpakkam after he killed his Son in law](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-man-arrested-in-kalpakkam-after-he-killed-his-son-in-law.jpg)
ஸ்ரேயாஸ் அய்யரை நேற்றய போட்டியில் சேர்க்காதது ஏன்? ரோஹித் சொன்ன பதில்..!
பேஸ்புக் காதல்
கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான மக்புல் என்பவருக்கும் நிஷாந்திக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் துவங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், 8 மாதத்துக்கு முன்பு மக்புல், நிஷாந்தியை கர்நாடகாவுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொண்டார்.
அடைக்கலம்
மக்புல் - நிஷாந்தி திருமணம் நடந்த பிறகு அவர்களை கல்பாக்கம் வரும்படி ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார். இதனால், நிஷாந்தி தனது கணவர் மக்புலை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். புதுமண தம்பதியை தனக்கு வழங்கப்பட்ட ஊழியர் குடியிருப்பில் தங்க வைத்திருக்கிறார் ராஜேந்திரன்.
திருட்டு
இந்நிலையில், வேலை இல்லாமல் இருந்த மக்புல் அடிக்கடி திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தனது மருமகனுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் ராஜேந்திரன். ஆனால், மக்புல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ததால் கோபமடைந்த ராஜேந்திரன் தனது மருமகனை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ராஜேந்திரனின் மனைவி இந்திராவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர் கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, நிஷாந்தி உடன் இருந்து பார்த்து கொண்டார். இதனால் நரசங்குப்பத்தில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் மக்புல் தங்கியிருக்கிறார்.
புகை மண்டலம்
இதனையடுத்து நேற்று முன்தினம் மக்புல் தங்கி இருந்த வீட்டில் இருந்து புகை வெளியே வந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்திருக்கின்றனர். அப்போது, உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த மக்புலை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியுற்றனர். இதனையடுத்து விரைந்துவந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவங்கினர்.
மாமனார் போட்ட பிளான்
விசாரணையின் போது ராஜேந்திரனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை துருவி துருவி விசாரித்தனர். அப்போது, ராஜேந்திரன் அளித்த தகவல்கள் அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறது.
போலீசாரிடம் ராஜேந்திரன்," என்னுடைய மகளை மக்புல் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டான். கர்நாடகவில் எனது மகள் மிகவும் வறுமையில் வாழ்ந்தாள். இதை எனது மகள் என்னிடம் தெரிவித்ததால் அவர்களை இங்கே வரவழைத்தேன். வேலைக்கு செல்லாமல், திருட்டு செயலில் ஈடுபட்டு வந்த மக்புலை நான் கண்டித்தேன். அவன் செய்த திருட்டு குறித்து அக்கம் பக்கத்தினர் என்னிடம் புகார் அளிக்கும்போது எனக்கு அவமானமாக இருந்தது. பலமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். நேற்று முன்தினம் நரசங்குப்பத்தில் உள்ள எனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கிய மக்புலை பார்க்க சென்றேன். அப்போது அங்கிருந்த மக்புலை, சுத்தியலால் அடித்து, அரிவாள் மனையால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன்" என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மருமகனை மாமனாரே கொடூரமான முறையில் கொலை செய்து எரித்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Breaking: கைது செய்யப்பட்ட ABVP நபர்களை சந்தித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட்..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)