"GPAY-னு சொல்லி ஏமாத்துவாங்க.. குடிச்சிட்டு வந்து TEA CAN-அ உதைப்பாங்க".. MIDNIGHT TEA வியாபாரிகளின் சோகம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆயிரம் வேலைகள், பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவை நம்மை சூழ்ந்து இருந்தாலும் ஒரு டீ சூடாக குடித்துவிட்டால் அது தரும் உற்சாகமே வேற லெவலில் இருக்கும். அதுவும் நாம் இருக்கும் இடத்திற்கே தேடிவந்து டீ கொடுத்தால் சொல்லவா வேண்டும்? இதனாலேயே சென்னையில் இரவு நேர ஊழியர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது மொபைல் டீ கடைகள்.
![Life Experiences of midnight Tea Sellers in Chennai, Video go Viral Life Experiences of midnight Tea Sellers in Chennai, Video go Viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/life-experiences-of-midnight-tea-sellers-in-chennai-video-go-viral.jpg)
சைக்கிளோ, பைக்கோ, வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட டீயை கேனில் அடைத்துக்கொண்டு இரவு முழுவதும் கால்கடுக்க நின்று வியாபாரம் செய்யும் இந்த மிட் நைட் டீ வியாபாரிகளை சந்தித்தது நம் Behindwoods குழு.
தூக்கம்
"நைட்ல நம்ம வீட்ல படுத்து தூங்குற சுகம் மாதிரி எதுவும் வராது சார்" எனப் பேச துவங்கிய ஒரு டீ விற்பனையாளர் இந்த தொழிலுக்கு வந்ததற்கு பிறகு அதிகபட்சமாக 3 முதல் 5 மணி நேரம் வரை மட்டுமே தூங்க முடிவதாக கூறினார். சொந்தமாக டீ கடை வைக்கும் எண்ணம் இருப்பதாகவும் பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக இப்படி இரவு முழுவதும் கண்விழித்து இந்த வியாபாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீடுகட்ட வாங்கிய கடன் காரணமாக பகலில் வேறு வேலைக்கு சென்றுவிட்டு இரவில் இந்த டீ விற்பனையை நடத்தி வருவதாக கூறிய நபர்," இதுவரை 23 லட்சம் கட்டிருக்கேன். ஆனா இன்னும் கடன் முடியவில்லை. என் பிள்ளைகளை வளர்க்க இது மாதிரி ஏதாவது செஞ்சா தான் உண்டு" எனச் சொல்லும்போது அவருடைய குரல் தணிந்திருந்தது.
கொரோனா
கொரோனா காலத்தில் எப்படி வாழ்க்கையை எதிர்கொண்டீர்கள்? எனக் கேட்டபோது," அந்த சமயத்துல வருமானம் ரொம்ப கொறஞ்சு போய்டுச்சு. நண்பர் ரூம்ல தான் தங்கி இருந்தேன். அவர் தான் சாப்பாடு வாங்கிக் கொடுப்பாரு" எனச் சொல்லிய இன்னொரு டீ விற்பனையாளர், தன்னுடைய குடும்பம் ஊரில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இப்படி உழைப்பதாக தெரிவித்தார்.
இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானம் பற்றி பேசிய இந்த இரவு நேர டீ விற்பனையாளர்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 500 முதல் 600 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் அதனை முதலீடாகக்கொண்டு அடுத்தநாள் தொழில் செய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
சிக்கல்
இதில் சிக்கல்களும் இருக்கின்றன எனச் சொல்லும் இந்த விற்பனையாளர்கள் சில நேரங்களில் GPay யில் பணம் அனுப்புவதாக சொல்லிவிட்டு சிலர் ஏமாற்றுவதாகவும் சில பேர் குடித்துவிட்டு வந்து டீ கேனை கீழே தள்ளி விட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும் கவலையுடன் குறிப்பிட்டனர்.
இப்படி பிரச்சனையில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிப்பீர்களா? எனக் கேட்டதற்கு," புகார் கொடுத்தால் அது தொழிலை பாதிக்கும். அதோடு தான் வாழ்ந்து வருகிறோம்" என அவர்கள் கூறுவது தடைகளை தாண்டியும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற அவர்களது மன உறுதிக்கு சாட்சி சொல்லும் சொற்களாக அமைந்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)