"நகையை காணோம்".. புகார் கொடுத்தவர் மேல போலீசுக்கு வந்த டவுட்.. விசாரணையில் வெளிவந்த "பலே பிளான்"..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சதுரங்க வேட்டை பாணியில் ஓசூர் அருகே நடைபெற்ற திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சித்திரக் குள்ளன், மண்ணூளி பாம்பு வரிசையில் இரிடியம் கடத்தலும் சமீப காலங்களில் சமூக வலை தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்களிடம் இருந்த இரிடியத்தை கடத்திச் சென்ற நபர்கள் மீது பொய் புகாரளித்த ஓசூர் தம்பதியையும் சேர்த்து மொத்தம் 5 பேர் கைதாகியிருப்பது ஓசூர் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரிடியம்
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவிலான உஷ்ணத்தை தாங்கக்கூடிய உலோகம்.
இதன் உருகுநிலை 2466 ° செல்சியஸ் (39 டிகிரி செல்சியஸ் 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு சமம்) என்ற உயர்ந்த அளவில் இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது. இதனால் கள்ளச் சந்தைகளில் இதற்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்துவருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாஸ்துசாலா நகரை சேர்ந்தவரான சிவசங்கர் (40) தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை விற்றுத் தரும்படியும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் கூறியிருக்கின்றனர். செம்புக் குடத்தில் இரிடியத்தை வைத்திருப்பதாகவும் அதன் மதிப்பு 1 கோடி எனவும் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.
பக்கா பிளான்
சிவசங்கரிடம் இரிடியம் இருப்பதை அறிந்த பன்னீர் செல்வம் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். தனது பிளானை அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39) ஆகியோர் மூலம் சக்ஸஸ் ஆக்கியிருக்கிறார் பன்னீர் செல்வம்.
இதனையடுத்து, இரிடியம் திருடு போனதை போலீசிடம் சொன்னால் தானும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தங்களது வீட்டில் இருந்த ரூபாய் 1லட்சம், 5½ பவுன் தங்க நகைகளை மற்றும் செல்போன்களை வைத்திருந்த செம்புக் குடத்தை மூன்று பேர்கொண்ட கும்பல் திருடிச் சென்றதாக ஓசூர் அட்கோ காவல்நிலையத்தில் புகார் செய்தனர் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (35).
விசாரணை
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று ஓசூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூவருக்கும் இந்த திருட்டு வழக்கிற்கும் சம்பந்தம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணை சூடுபிடிக்க, இரிடியம் மேட்டரும் வெளியே வந்திருக்கிறது. இதனையடுத்து தம்பதி உள்ளிட்ட 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செம்புக் குடத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய அரூர் பகுதியை சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
