'வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி?' - திருமாவளவனுக்கு வந்த கோபம்.. முதல்வருக்கு வைத்த கோரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா?' என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பயுள்ளார்.

கோவை மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிகழ்வில் உறுதிமொழி ஏற்பதற்கு முன்பு, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில், 'இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதை அகற்றும்படியும், அதில் 'இந்து' என்கிற வார்த்தை மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்பு காந்தியை கொன்ற கோட்சே என கூறியதற்கு கோட்சே பெயரை உச்சரிக்க கூடாது என்று போலீசார் கூறியாதக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கையின் மூலம் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'காந்தி நினைவுநாளையொட்டி கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.இராமகிருஷ்ணன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாது என அப்பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. காவல் துறையினர் அவ்வாறு நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை. காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி பயங்கரவாதி நாதுராம் கோட்சே தான் என்பதும், அவன் அதற்காக மரணத் தண்டணைக்குள்ளானான் என்பதும் வரலாற்று உண்மை. இந்த வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியடிகள் கொல்லப்படவே இல்லை; வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா? அல்லது அவர் காந்தியைக் கொன்றது சரி என்று கோட்சேவைக் கொண்டாடும் கும்பலில் ஒருவரா? அவரும் அவரோடு வந்த அதிகாரிகளும் நடந்துகொண்ட போக்குகள் மற்றும் அணுகுமுறைகள் வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூகநீதி அரசின் கீழ் பணியாற்றும் காவல்துறையினர், மதவெறிபிடித்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களைப்போல நடந்திருப்பதை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
