‘DEAR விஜய் சார்’!.. ‘எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேணும்’.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. டாக்டர் எழுதிய ‘உருக்கமான’ லெட்டர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது குறித்து டாக்டர் ஒருவரின் உருக்கமான பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. திரையுலகை சேர்ந்த அரவிந்த்சுவாமி, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், ‘டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.
இந்த நோய் பரவலை தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதும் இல்லை, ஹீரோக்களும் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.
கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் உயிரிழக்கின்றனர். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி, இல்லை கொலை. சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள்.
நாம், நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்’ என உருக்கமாக டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
