அந்த 'மேட்ச்'ல நாங்க ஜெயிக்க... 'தோனி' பண்ண சின்ன விஷயம் தான் காரணம்... 'ரகசியம்' உடைக்கும் 'உத்தப்பா'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | May 21, 2020 08:05 PM

டி 20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது உலக கோப்பை தொடர் 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் மிக முக்கியமான தொடர் இது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தலைமையில் இந்திய அணி முதன் முறையாக இந்த உலக கோப்பை தொடரில் களமிறங்கி கோப்பையை கைப்பற்றியது.

Uthappa reveals the secret behind victory in Bowl out

இந்திய அணி அந்த உலக கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் தொடரில் இந்திய அணி பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றது தான். பவுல் அவுட் முறையில், ஆட்டம் டை ஆகும்போது இரு அணிகளில் இருந்து ஐந்து வீரர்கள், பேட்ஸ்மேன் இல்லாமல் ஸ்டம்ப்பை குறி வைத்து பந்துவீச வேண்டும். அதிக முறை ஸ்டம்ப்பை தாக்கிய அணி வெற்றி பெறும் அணியாக அறிவிக்கப்படும். 

இந்நிலையில், இந்திய அணி அந்த பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து இந்திய அணி வீரர் ராபின் உத்தப்பா தற்போது மனம் திறந்துள்ளார். 'அந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் தோனி செய்த சிறிய விஷயம் மிகப்பெரிய பலனை கொடுத்தது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர், ஸ்டம்பிற்கு நேராக கீப்பிங் செய்யாமல் சற்று விலகியே நிற்பார். ஆனால் தோனி கீப்பிங் செய்யும்போது ஸ்டம்பிற்கு நேராக நின்றார். அது மட்டுமில்லாமல் ஸ்டம்ப் உயரத்திற்கு சமமாக உட்கார்ந்திருந்தார். இதனால் அவரது கையில் பந்தை வீசுவது போன்று செய்தோம். அது ஸ்டம்பை தகர்த்தது' என்றார்.

மேலும் அப்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் குறித்து உத்தப்பா கூறுகையில், 'போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது எங்கள் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் பவுல் அவுட் முறைக்கும் தயாராக இருக்கும் படி அறிவுறுத்தினார். அதனால் போட்டியின் போது எந்தவித பதட்டமும் இல்லாமல் பந்தை ஸ்டம்பிற்கு வீச உதவி செய்தது' என தெரிவித்தார்.