லண்டனுக்கு செல்லும் இந்திய அணியின் விமானத்தை தவற விட்ட அஸ்வின்.. இது தான் காரணமா? முழு தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. இந்த அணியில் அஸ்வினின் பெயர் இடம் பெற்றிருந்தது.

ஆனால் இங்கிலாந்துக்கு சென்றடைந்த வீரர்களில் அஸ்வினின் பெயர் இடம்பெறவில்லை. அஸ்வின் தற்போது இந்தியாவில் தனிமைப்படுத்தலில் உள்ளார். மேலும் அனைத்து நெறிமுறை தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே இந்திய அணியில் சேருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் "அஷ்வின் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை, ஏனெனில் அவர் புறப்படுவதற்கு முன்பு கோவிட் தொற்றுக்கு உள்ளானது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 1 ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் அவர் சரியான நேரத்தில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று பிசிசிஐ அதிகாரிகள் பிடிஐயிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அஸ்வின் லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை தவறவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மற்ற இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரின் மேற்பார்வையில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
பிசிசிஐ, கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில்லின் பயிற்சி வீடியோவைப் பகிர்ந்துள்ளது. லீசெஸ்டர்ஷைர் கவுண்டி மைதானத்தில் இந்த ஜோடி இந்தியாவுக்காக பயிற்சி டெஸ்டில் இன்னிங்ஸில் ஒபனிங் செய்ய வாய்ப்புள்ளது. இந்திய அணி ஜூன் 24 முதல் லீசெஸ்டர்ஷையருடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெறுவதில் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி முக்கிய பங்கு வகித்தது. தென்னாப்பிரிக்கா T20I களில் ஓய்வெடுக்கப்பட்ட பிறகு ரோஹித் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். இடுப்பு காயம் காரணமாக ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவர் இல்லாததால் கில் இந்தியாவுக்காக ஒபனிங் இறங்க உள்ளார்.
நான்கு டெஸ்டில், ரோஹித் ஒரு சதம் மற்றும் 2 அரைசதம் உட்பட 368 ரன்களை குவித்துள்ளார், அதே நேரத்தில் ராகுல் ஒரு சதம் மற்றும் அரைசதம் உட்ப 315 ரன்களை எடுத்தார். இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் T20I மற்றும் ODIகளையும் கொண்டுள்ளது, ஒருநாள் தொடருக்கு முன் டெர்பிஷைர் மற்றும் நார்தாம்ப்டன்ஷைருக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணியினர் விளையாடுவார்கள்.
ராகுல் டிராவிட், ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை முடித்துக் கொண்டு லண்டன் சென்றடைந்துள்ளனர். அவர்கள் இன்று செவ்வாய்கிழமை லெய்செஸ்டர் பயணமாகவுள்ளனர்.

மற்ற செய்திகள்
