"என் நம்பர் எல்லார்கிட்டயும் இருக்கு.. ஆனா அப்படி ஒரு நேரத்துல தோனி மட்டும் தான் மெசேஜ் பண்ணாரு".. கோலி சொன்ன விஷயம்.. நெகிழ்ந்த ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேந்திர சிங் தோனி குறித்து விராட் கோலி உருக்கத்துடன் பேசியிருக்கிறார். இது இருவரது ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | சந்தையில் சாம்சங் நிறுவனம் களமிறக்கும் Galaxy Z Fold4 போன்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?
ஆசிய கோப்பை
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் துவங்கியது. குரூப் ஏ வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும், குரூப் பி யில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணியை வீழ்த்தி க்ரூப் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, முன்னாள் இந்திய அணி கேப்டன் மஹேந்திர சிங் தோனி குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மெசேஜ்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி,"நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, ஒருவரிடமிருந்து ஒரு செய்தி மட்டுமே வந்தது. கடந்த காலத்தில் அவருடன் விளையாடியிருக்கிறேன். அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. பலரிடம் எனது எண் உள்ளது. மேலும் பலர் தொலைக்காட்சியில் எனக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவர்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை. நான் அவரிடமோ அல்லது அவர் என்னிடமோ எதையும் எதிர்பார்க்காதவர்கள். எங்களுக்குள் வெளிப்படைத்தன்மை இருக்கிறது" என்றார்.
மேலும் தனக்கு ஆலோசனைகள் வழங்குபவர்கள் தன்னிடம் நேரிடையாக பேசுவதில்லை எனவும் வெற்றிகள் கடவுள் அளிப்பது என்றும் கோலி குறிப்பிட்டார். நேற்றைய போட்டியில் 18 ஓவரில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அர்ஷிதீப் சிங் முக்கியமான கேட்சை தவறவிட்டார். இது குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்துவந்தனர்.
Credit: DNA india
தவறுகள்
இந்நிலையில், இதுபற்றி பேசிய கோலி,"யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். நிலைமை இறுக்கமாக இருந்தது. இது ஒரு அதிக பிரெஷர் இருக்கும் விளையாட்டு. அதனால் தவறுகள் நடக்கலாம். நான் எனது முதல் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த போட்டி பாகிஸ்தானுக்கு எதிரானது. ஷாகித் அப்ரிடிக்கு எதிராக நான் மிகவும் மோசமான ஷாட்களை விளையாடினேன். நான் காலை 5 மணி வரை அறையின் மேற்கூரையை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் தூங்க முடியவில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் இவை இயல்பானவை. மூத்த வீரர்கள் உங்களைச் சுற்றி இருக்கிறார்கள். இப்போது அணிக்குள் நல்ல குழு மனப்பான்மை உள்ளது. கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நினைத்து பெருமையடைகிறேன். வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். எனவே ஒருவர் தனது தவறை ஏற்றுக்கொண்டு, அதை நிவர்த்தி செய்து மீண்டும் அந்த அழுத்த சூழ்நிலையில் இருப்பதை எதிர்நோக்க வேண்டும்" என்றார்.

மற்ற செய்திகள்
