'மன்னிச்சிருங்க தீதி'...'கண்ணா இது வெறும் ட்ரெய்லர் தான்'... 'இனி தான் மெயின் பிக்சர்'... அதிரடியை ஆரம்பிக்கிறாரா 'மம்தா'?
முகப்பு > செய்திகள் > இந்தியாமம்தாவின் வலதுகரமாக திகழ்ந்த சுவேந்து அதிகாரி பாஜகவுக்குச் சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
![TMC turncoats looking to rejoin party from BJP in Bengal TMC turncoats looking to rejoin party from BJP in Bengal](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/tmc-turncoats-looking-to-rejoin-party-from-bjp-in-bengal.jpg)
அரசியல் சதுரங்கத்தில் அடுத்து என்ன நடக்கப்போகும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலானது மம்தாவா அல்லது மோடியா என்ற ரீதியில் தான் நடைபெற்றது. இந்த தேர்தலில் வென்று எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாகத் தேர்தல் களத்தில் பணியாற்றியது.
தேர்தல் பரபரப்பு உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் மம்தாவின் வலதுகரமாக திகழ்ந்த சுவேந்து அதிகாரி பாஜகவுக்குக் கடந்த டிசம்பரில் தாவியது மேற்குவங்க அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸிலிருந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் என ஒரு பெரும் படையே பாஜக பக்கம் தாவியது.
இருப்பினும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குத் தொகுதிகள் கிடைக்கவில்லை. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றித் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 77 தொகுதிகளைக் கைப்பற்றி மாநிலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பாஜக பெற்றது.
இந்த சூழ்நிலையில் மம்தா மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய தலைவர்கள், தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவ வரிசைகட்டி நிற்கின்றனர். முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் திரிணாமுல் காங்கிரஸில் இணைவதற்காக மம்தாவிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இதில் சிலர் பாஜகவுக்குத் தாவியதற்காக மன்னிப்பு கேட்டிருக்கின்றனர். இருப்பினும் மம்தா, கட்சி தாவியவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதற்கான க்ரீன் சிக்னலை இன்னமும் கொடுக்கவில்லை. மம்தாவுக்கு முன்னர் நெருங்கியவராக விளங்கியவரும் தற்போது பாஜக தேசிய துணைத் தலைவராக இருப்பவருமான முகுல் ராய் கூட திரிணாமுலுக்கு தாவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் முகுல் ராயின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அவரை மருத்துவமனையில் பார்க்கச் சென்றார். இதன் காரணமாக முகுல் ராய் கூட கட்சி தாவலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கும் மம்தா, தனது அதிரடியை ஆரம்பித்து விட்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)