'உங்க ஷூவை ஏன் அவர்கிட்ட கொடுத்தீங்க?".. ஏர்போட்ல திருதிருன்னு முழிச்ச நபர்.. கஸ்டம்ஸ் அதிகாரிகள் காட்டிய அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜெய்ப்பூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் 370 கிராம் தங்கத்தை அவர் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று துபாயில் இருந்து ஒரு பயணி வந்திருக்கிறார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறியதும் அவசரமாக ஓடிய அந்த நபர் செய்த காரியத்தை பார்த்ததும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு அவர்மீது சந்தேகம் வந்திருக்கிறது.
உடமை மாற்றம்
விமான நிலையத்தில் இருந்து வெளியே அவசரமாக சென்ற அந்த நபர், தான் கொண்டுவந்த பொருட்களை அங்கே காத்திருந்த நபர் ஒருவரிடத்தில் கொடுத்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய ஷூவையும் அவர் கழட்டி ஒப்படைக்கவே சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
விசாரணை
இதனை அடுத்து அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறது சுங்கத்துறை. அவரிடத்தில்,"உங்களுடைய ஷூவை ஏன் அவரிடத்தல் கழற்றி கொடுத்தீர்கள்? எனவும் உங்களுடைய உடமைகளில் என்ன இருக்கிறது?" எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்திருக்கிறார் அந்த பயணி.
அதன் பின்னர், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஷூவை அதிகாரிகள் பரிசோதிக்க துவங்கினார்கள். அப்போது, அதனுள் பிளாஸ்டிக் பை ஒன்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனை வெளியே எடுத்தபோது அதற்குள் தங்கத்தை பேஸ்ட்டாக அதனுள் வைத்து சம்பந்தப்பட்ட நபர் கடத்திவந்தது புலனாகியிருக்கிறது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த நபர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடத்தி வந்த தங்கம் 369.900 கிராம் எடை இருந்ததாகவும் அதன் சந்தை மதிப்பு 19,45,674 ரூபாய் எனவும் சுங்கத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த தங்கம் 99.50 சதவீதம் தூய்மையானதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சட்ட விரோதமாக தங்கம் கடத்திவந்த வழக்கில் அந்த நபரை கைது செய்திருப்பதாகவும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஷூவிற்குள் தங்கம் கடத்திவந்த நபர் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால் சிறிதுநேரம் அங்கே பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்
