கேரளாவையே உலுக்கிய 2 பெண்கள் பலியான சம்பவம்.. கைதானவருக்கு இருந்த விநோத பழக்கம்.. அங்கதான் விஷயமே ஆரம்பிச்சிருக்கு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவையே உலுக்கிய 2 பெண்கள் பலியான சம்பவத்தில் கைதான முகமது ஷபி குறித்த தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் மற்றும் தருமபுரியை சேர்ந்த பத்மா ஆகியோர், எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளனர். இதனிடையே, சில மாதங்கள் இடைவெளியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர். இது பற்றி இருவரின் வீட்டாரும் புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரின் செல்போன் எண்கள் குறித்து விசாரித்ததில் கடைசியாக இருவருக்கும் முகம்மது ஷபி என்ற ஒரே நபர் பேசி இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து முகமது ஷபியை காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் பண சிக்கல் தீர சிறப்பு பூஜை செய்ததும் அதில் இரு பெண்களையும் பலி கொடுத்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும் சில பகுதிகளில் காயங்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெண்களின் உடல் உறுப்புகளை சாப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைதான லைலா, நரமாமிசத்தை சாப்பிட்டதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக முகமது ஷபி, பெண்களின் உறுப்புகளை தம்பதியை சாப்பிட சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.
இதனிடையே, நாட்டையே அதிர வைத்துள்ள இந்த வழக்கில் கைதான ஷபி, சோசியல் மீடியாவில் ஸ்ரீதேவி எனும் பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதன் மூலமாக பலரிடம் பேசி வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வழக்கமாக கவிதைகளை அந்த அக்கவுண்ட் மூலமாக எழுதிவந்ததாக சொல்லப்படும் ஷபி, தன்னை சாமியார் என்றும் பண மற்றும் குடும்ப சிக்கல்கள் தீர பூஜை நடத்துவதாகவும் பகவல்சிங்கிடம் ஷபி தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், வேறு யாருடனாவது ஷபி சோசியல் மீடியாவில் பேசியிருக்கிறாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
