பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தா.. இலவசமா சாப்பாடு கொடுக்கும் உணவகம்..இது செம்ம ஐடியாவா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தை சேர்ந்த உணவகம் ஒன்று பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு உணவுகளை வழங்குவதாக அறிவித்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் பல தாக்கங்களை மனிதர்கள் சந்தித்து வருகிறார்கள். கழிவு மேலாண்மையை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் போட்டிபோட்டுக்கொண்டு பணிபுரிந்து வருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதியும் பயன்பாட்டுக்கு வந்தாலும், நடைமுறை சிக்கல்கள் காரணமாக அந்த திட்டம் மூலமாக குறைவான பிளாஸ்டிக் குப்பைகளை மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இதற்கு முதல் காரணமாக சொல்லப்படுவது பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பது. ஊர்கள்தோறும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என கழிவு பொருட்கள் வகைப்படுத்தப்பட்டாலும் தெருக்களில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் கணிசமாகவே இருக்கிறது. இதனை சீர்செய்யும் நோக்கில் குஜராத்தை சேர்ந்த உணவகம் ஒன்று புதிய திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
முன்மாதிரி உணவகம்
குஜராத்தின் ஜூனாகாத் பகுதியில் சர்வோதய் சகி மண்டல் நிர்வாகத்தின் துணையுடன் இயங்கிவரும் இந்த உணவகத்தை முழுவதும் பெண்களே நடத்துகின்றனர். உணவிற்காக விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் மற்றும் உள்ளூர் மூலப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் இந்த உணவகத்தின் பணியாளர்கள்.
வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் எடையின் அடிப்படையில் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என ஜூனாகத் கலெக்டர் ரசித் ராஜ் தெரிவித்திருக்கிறார். பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நோக்கோடு இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளதக அவர் தெரிவித்தார்.
மெனு என்ன?
அரை கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவரும் மக்களுக்கு லெமன் ஜூஸ் அல்லது பெருஞ்சீரக ஜூஸ் வழங்கப்படும் எனவும் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவரும் நபர்களுக்கு ஒரு பிளேட் டோக்லா அல்லது போஹா அளிக்கப்படும் என ஜூனாகாத் கலெக்டர் தெரிவித்திருக்கிறார். மக்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடையை பொறுத்து உணவின் அளவும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
உணவகத்தில் பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பெற தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், பசுமையான ஜூனாகாத் திட்டத்தின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஜூனாகாத் கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.
பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொன்டு உணவு வழங்கும் இந்த திட்டத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
