"அவர பொதச்ச எடத்துல, என்னையும் பொதச்சுடுங்க"... 'உருக்கமான 'கடிதம்'... 'தாய்' கண்ட 'அதிர்ச்சி' காட்சி!!... மனதை நொறுக்கிய 'சிறுமி'யின் முடிவு!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமோல் என்னும் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, தனது தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரர்களுடன் ராமோல் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமியின் அண்ணன் முறையான இளைஞர் ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த இளைஞரின் மனைவி விபத்து ஒன்றில் இறந்து விட்டதால், மனவேதனையில் இந்த முடிவை எடுத்திருந்தார்.
இதன் காரணமாக, இளைஞரின் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, அந்த சிறுமி, அண்ணன் முறையான அந்த இளைஞரிடம் மிகவும் அன்பாக இருந்துள்ளார். இதனால் அவரது மறைவால் அதில் இருந்து மீள முடியாமல் அதிர்ச்சியிலேயே சிறுமி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிறுமியின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் வெளியே சென்றுள்ளனர்.
அன்று மதிய நேரத்தில், சிறுமியின் இளைய சகோதரர், உணவருந்தி கொண்டிருந்த தாயிடம், அக்காவின் வாயில் இருந்து நுரை போல வருவதாக தெரிவித்துள்ளார். பதறியடித்துக் கொண்டு மகளைக் காண தாய் ஓடிய நிலையில், சிறுமி துப்பட்டா ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள காட்சியைக் கண்டு உறைந்து போயுள்ளார். இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சிறுமி எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்று கிடைத்தது.
அந்த தற்கொலை கடிதத்தில், 'எனது அண்ணன் இல்லாத உலகில் எனக்கு வாழ பிடிக்கவில்லை' என குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த இளைஞர் உடலை புதைத்த இடத்திலேயே தனது உடலையும் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தில் இரண்டு வாரங்களில் நடந்த அடுத்தடுத்து மரணங்களால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
