'மன்னிச்சிருங்க தப்பு நடந்து போச்சு'...'சீனாவுக்கு பதிலா இந்தியான்னு சொல்லிட்டோம்'...'WHO' செஞ்ச பிழை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 10, 2020 04:53 PM

இந்தியாவில் கொரோனா தொற்று சமுகப்பரவலாக மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த அறிக்கையில் பிழை இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

Cluster Of Cases In India, Not Community Transmission

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனா ‘சமூகப் பரவலாக' உள்ளது எனவும், சீனாவில் ‘ஆங்காங்கே' தொற்று உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய அரசு உறுதியாக கூறி வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்தியாவில் ஆங்காங்கே கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளதே தவிர, சமூகப் பரவல் பாதிப்பு இல்லை என்றும், தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் பிழை இருந்ததாகவும் NDTV செய்தி நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் உலகளவில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை 6,412 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனிடையே கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறும்போது, நோய் தொற்று ஏற்பட்டவருக்கு எங்கிருந்து நோய் தொற்று வந்தது என்பதை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமான காரியமாக மாறிப்போகும். அந்த ஒரு நிலை வந்தால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும்.

தற்போது அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினால், வைரஸ் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே ‘நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 400 மாவட்டங்களுக்கு கொரோனா பரவவில்லை என்றும், 133 மாவட்டங்கள்தான் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.