பக்கா ஸ்கெட்ச்... பக்கத்து வீடுகளுக்கு பூட்டு... ஏடிஎம்-ஐ ஆட்டையை போட பலே காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏடிஎம் மெஷினை வெடி வைத்து தகர்த்து முகம் அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் சுமார் 16 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரம் ஒன்றை வெடி வைத்து தகர்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் கொள்ளையர்கள் சுமார் 16 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.
புனேவின் சிம்பாலி கிராமத்தில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்களின் அட்டூழியத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறை தரப்பு, ‘சிம்பாலி கிராமத்தில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை ஒரு தனியார் நிறுவனம் தான் நிர்வாகம் செய்து வருகிறது. கொள்ளைச் சம்பவம் நடந்த போது ஏடிஎம்-க்கு காவலாக யாரும் இருக்கவில்லை.
அதிகாலை சுமார் 3:40 மணி அளவில் கொள்ளையர்கள் இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விடக் கூடாது என்னும் நோக்கில் கொள்ளையர்கள் அனைத்து வீடுகளுக்கும் வெளியில் இருந்து பூட்டுப் போட்டு உள்ளனர்.
இதனால் வெடிச் சத்தம் கேட்ட பின்னரும் உள்ளூர் மக்களால் உடனடியாக வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. 'கொள்ளைச் சம்பவம் 3:40 மணிக்கு நடந்து இருந்தாலும் எங்களுக்கு காலை 9 மணிக்குத் தான் தகவல் கிடைத்தது’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே மாவட்டத்தில் இது போல் ஏடிஎம் இயந்திரங்களை கொள்ளையர்கள் அடிக்கடி வெடி வைத்து தகர்த்து திருடும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறதாம். இந்த ஆண்டில் மட்டும் இது மூன்றாவது வெடி வைத்து தகர்த்து கொள்ளையடித்த சம்பவம் ஆக இது உள்ளது.
பணத்தைத் திருட ஏடிஎம் மெஷினை வெடி வைத்து தகர்த்ததால் வெடித்து தெறித்த ஏடிஎம் மெஷினின் பாகங்கள் தெரு முழுவதும் சிதறி கிடந்துள்ளது. புனேவின் தொழிற்சாலை பகுதிகளில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மீறப்படுவதாகவும் போலீஸார் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை இறுக்கிப்பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
