"அரியர் இருக்கு எனக்கு.. அது ஏன் புரியமாட்டங்குது உனக்கு".. இலங்கையில் மாணவர்கள் நூதன போராட்டம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கையில் நாள்தோறும் 13 மணி நேரங்களுக்கு மின்வெட்டு இருப்பதாகவும் இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாகவும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

நெருக்கடி
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மின்வெட்டு
மின்வெட்டு காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் இலங்கையில் தங்களது பணிகளை நிறுத்திவிட்டன. மேலும், மாணவர்களால் இரவு நேரத்தில் தங்களது கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது,"அரியர் அதிகம் எனக்கு, அது ஏன் புரியவில்லை உனக்கு?", "எம்முடைய கல்வி கனவை கலைக்காதே" போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
வீழ்ந்த நாணய மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. மேலும், இலங்கையிடம் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் அந்நாடு தவிக்கிறது. இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் பணவீக்கம் 4 மடங்கு அதிகரித்திருப்பது பிரச்சனையின் மூலதனமாக கருதப்படுகிறது.
பதவி விலகல்
இலங்கை அரசின் 26 கேபினெட் அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதிவியேற்றுள்ளனர். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
