'உண்மையான பாதிப்புகள் கவனம் பெறல’.... 'அதனால அடுத்த ஆண்டு இப்டித்தான் இருக்கும்’... ‘காரணம் சொல்லும் ஐ.நா. உணவு அமைப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால், இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு மிக மோசமான சூழ்நிலை நிலவும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை முடிவுபெறாமல் தொடர்ந்து வருகிறது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதிலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்துக்கு உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லி பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்தப் பேட்டியில், ‘ஐ.நா அமைப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளை எச்சரிப்பதற்கு ஒரு வாய்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வருடம், இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்கும். 2021-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய தேவையுள்ளது. கொரோனா பாதிப்பைவிட அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஊடகங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் கவனம் பெறவில்லை.
உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக, நம்மால் 2020 ஆம் ஆண்டில் பஞ்சத்தை தவிர்க்க முடிந்தது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும்.
இன்னொரு முழு ஊரடங்கு அலை இருக்கிறது. 2020-ம் ஆண்டு கையிருப்பு இருந்த பணம், 2021-ம் ஆண்டில் இருக்காது. இன்னும், 12 முதல் 18 மாதங்களுக்கு இதேபோன்ற அசாதாரண சூழல் இருக்கலாம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 2019-ம் ஆண்டில் உலகளவில் 88 நாடுகளில் பசியால் வாடிய 100 மில்லியன் மக்களுக்கு ஐ.நா. உணவு அமைப்பு உணவு வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நெருக்கடி காலத்திலும் ஏமன், காங்கோ, நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் நிலவிய பசிக்கொடுமைக்கு இந்த அமைப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
